செய்திகள்
தற்கொலை

செல்போனில் பேசியதை கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2021-11-21 03:52 GMT   |   Update On 2021-11-21 03:52 GMT
ஈரோட்டில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு பெரியவலசு பகுதியை சேர்ந்தவர் அம்பிகா. தறிப்பட்டறை தொழிலாளி. உடல் நலக்குறைவால் இவரது கணவர் சிவா 2 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவர்களின் மகள் பாக்கியலட்சுமி (13) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை வழக்கம் போல் அம்பிகா தறிப்பட்டறைக்கு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் பாக்கியலட்சுமி மட்டும் இருந்துள்ளார். அம்பிகா மதியம் சாப்பிடுவதற்காக 2.30 மணிக்கு வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டினார். ஆனால் எந்தவித பதிலும் வரவில்லை. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள ஒரு அறையில் சேலையால் தூக்கு போட்ட நிலையில் மாணவி பாக்கியலட்சுமி தொங்கி கொண்டிருந்தார்.

உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பாக்கியலட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் செல்போனில் பேசியதை கண்டித்ததால் பாக்கியலட்சுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. எனினும் இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News