செய்திகள்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று குழு ஆய்வு
பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு செய்தனர்.
திருப்புவனம்:
திருப்புவனம் யூனியனை சேர்ந்த பூவந்தியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் பூவந்தியை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 2008-ல் ஐ.எஸ்.ஓ. தரச் சான்று கிடைத்துள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் மாநில சுகாதாரத் துறையும் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
தற்போது மத்திய சுகாதாரத் துறையின் தேசிய தர உறுதிச் சான்று ஆய்வு குழு உறுப்பினர்கள் டாக்டர். அர்ச்சனா, டாக்டர். கமலேகர் பாட்டீயா ஆகியோர் கடந்த 2 நாட்களாக பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் ஆய்வு செய்தனர். முன்னதாக அதிகாரிகளை சிவகங்கை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர். ராம்கணேஷ் வரவேற்றார்.
பின்பு தேசிய தர உறுதிச் சான்று குழுவினர் மருத்துவமனை வளாகத்தூய்மை, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, அவசர சிகிச்சை பிரிவு, ரத்தப் பரிசோதனை கூடம், ஸ்கேன், எக்ஸ்ரே, இ.சி.ஜி. அறைகள், நோயாளிகள் வருகை பதி வேடுகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஆய்வு செய்ததுடன் இதுகுறித்து விளக்கம் கேட்டு அறிந்தனர்.
தேசிய தர உறுதிச்சான்று குழுவினரிடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு, டாக்டர்கள் ஸ்ரீகாந்த், வரதீஸ்வரி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.