தஞ்சையில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு
தஞ்சாவூர்:
தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் அண்ணா காலனியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவி தாமரைச்செல்வி (வயது57). சம்பவத்தன்று இவர் மளிகை கடையில் இருந்து வியாபாரத்தை கவனித்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் கடைக்கு வந்தனர். அவர்கள் பொருட்கள் கேட்பது போல் கேட்டனர். இதனை நம்பிய தாமரைச்செல்வி அவர்கள் கேட்கும் பொருட்களை எடுத்துவைத்து கொண்டிருந்தார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென அந்த இரண்டு பேரும் சேர்ந்து தாமரைச்செல்வியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை சட்டென்று பறித்தனர். அதிர்ச்சி அடைந்த தாமரைச்செல்வி திருடன்.. திருடன்... என கத்தி கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் அந்த இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.
இது குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.