செய்திகள்
தற்கொலை

இளம்பெண்ணுடன் திருமணம் நிச்சயம்: கள்ளக்காதலியை பிரிய முடியாததால் போட்டோகிராபர் தற்கொலை

Published On 2021-11-06 10:33 GMT   |   Update On 2021-11-06 10:33 GMT
அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் கள்ளக்காதலியை பிரிய முடியாததால் போட்டோகிராபர் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 32). போட்டோகிராபர். வேலைக்காக கோவைக்கு வந்த இவர் சிவானந்தா காலனி சாஸ்திரி ரோட்டில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனோஜ் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுக்க சென்ற போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த 27 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் 2 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.மனோஜின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைப்பது என முடிவு செய்தனர். பின்னர் ஒரு இளம்பெண்ணை பார்த்து திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் திருமணத்திற்காக ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

கள்ளக்காதலியை பிரிந்து செல்வதா? அல்லது பெற்றோர் பார்த்து பேசி முடித்த பெண்ணை திருமணம் செய்வதா? என மனோஜ் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வி‌ஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மனோஜ் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News