செய்திகள்
கைது

திருப்பத்தூர் அருகே முயல் வேட்டையாடிய 6 பேர் கைது

Published On 2021-11-06 09:29 GMT   |   Update On 2021-11-06 09:29 GMT
திருப்பத்தூர் அருகே முயல் வேட்டையாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வனப் பகுதிகளில் முயல்கள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வனச்சரகர் மதிவாணன் தலைமையில் வனவர்கள் திருப்பதி ராஜன், பிரகாஷ், உதயகுமார், மலைச்சாமி, சாமிகண்ணு, சுந்தர், வனக்காப்பாளர்கள் சதீஷ்குமார், வீரையா, கண்ணபிரான், செல்வம் வனக்காவலர்கள் கோபுரபாண்டி, மாரியப்பன், வாசுகி, சின்னப்பன் உள்ளிட்டோர் பல்வேறு குழுக்களாக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

நாச்சியாபுரம் அருகே உள்ள இளங்குடியில் முயல் வேட்டையாட முயன்றதாக கூறி இளங்குடியைச் சேர்ந்த கருப்பையா (வயது 39) என்பவரை கைது செய்தனர்.

அதே போன்று நேமத்தன் பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு (33), மலைச்சாமி (49) ஆகியோரும் பைக்குடிப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் (39), ராஜா (33), தனுஷ் (17) ஆகியோரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் வனச்சரக பகுதிகளில் முயல்களை வேட்டையாட முயன்றதாக வன உயிரின குற்றப் பிரிவின் கீழ், 6 பேர் மீது வனச்சரகர் மதிவாணன் வழக்குப்பதிவு செய்தார்.

2 தினங்களுக்கு முன்பு கீழச்சிவல்பட்டி அருகே 17 மயில்களை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறையினருக்கும் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News