செய்திகள்
அஞ்செட்டியில் ரேஷன் அரிசி கடத்திய பெண் கைது
அஞ்செட்டியில் ரேஷன் அரிசி கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி போலீஸ் நிலையம் முன்பு உள்ள சோதனைச்சாவடியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக மாநில அரசு பஸ்சில் சோதனை செய்தனர். அதில் 9 மூட்டைகளில் 450 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசி கடத்தியதாக சேசுராஜபுரம் அருகே உள்ள சிவலிங்கபுரத்தை சேர்ந்த சின்னசாமி மனைவி பாப்பம்மா (வயது 40) என்பவரை கைது செய்தனர். 450 கிலோ ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.