செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே மனைவியை கத்தியால் குத்தியவர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே மனைவியை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளியை சேர்ந்தவர் முருகேசன் (38), இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பவித்ரா (28) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. முருகேசன் ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். பவித்ரா, ஓசூரில் பாகலூர் சாலையில் உள்ள ஒரு கால் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். முருகேசன், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டாராம். இதனால் கோபித்துக்கொண்டு பவித்ரா தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று மாலையில் பவித்ரா வேலையை முடித்து விட்டு சாலையில் நடந்து சென்ற போது திடீரென முருகேசன் அவரை வழிமறித்து குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அவர் வர மறுக்கவே ஆத்திரம் அடைந்த முருகேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பவித்ராவின் இடுப்பு பகுதியில் குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். பவித்ராவை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.