செய்திகள்
சிவகங்கை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பாம்புகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

சாதி சான்றிதழ் வழங்கக்கோரி பாம்புகளுடன் வந்து நூதன போராட்டம்

Published On 2021-10-29 19:06 IST   |   Update On 2021-10-29 19:06:00 IST
சாதி சான்றிதழ் கோரி காட்டு நாயக்கர் இன மக்கள் சிவகங்கை ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு பாம்புகளுடன் வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை:

மானாமதுரை, பர்மா காலனி காட்டு நாயக்கர் குடியிருப்பில் 50-க்கும் மேற்பட்ட காட்டு நாயக்கர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 100 ஆண்டு களுக்கு முன்பு மலை பகுதிகளில் இருந்து இங்கு குடிபெயர்ந்தவர்கள். இவர்கள் தற்சமயம் பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.

இவர்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க செல்லும் போது சாதி சான்றிதழ் கேட்பதால் பள்ளிகளில் சேர முடியாமல் தவிக்கின்றனர். எனவே அவர்கள் மேல்படிப்புகள் வரை தொடரவும் இட ஒதுக்கீடை பெறவும் சாதி சான்றிதழ் தரக்கோரியும் கடந்த பல ஆண்டுகளாக அரசிடம் மனு அளித்து வருகின்றனர்.

ஆனால் இவர்களுக்கு இதுவரை சாதி சான்றிதழ் வழங்கப்பட வில்லையாம். இதனால் நேற்று அவர்கள் சிவகங்கை ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு சாதி சான்றிதழ்வழங்க கோரி பாம்புகளுடன் வந்தனர். அலுவலக வாசலில் பாம்புகளை வெளியேவிட்டனர்.

இதைத் தொடர்ந்து கோட்டாட்சியர் முத்துக்கழுவன் அவர்களை அழைத்து சாதி சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Similar News