செய்திகள்
காரைக்குடி தொழிலாளி கொலை

காரைக்குடியில் கடனை திருப்பி கேட்ட தொழிலாளி வெட்டிக்கொலை

Published On 2021-10-25 09:03 GMT   |   Update On 2021-10-25 09:03 GMT
காரைக்குடியில் கடனை திருப்பி கேட்ட தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் லட்சுமணன் (வயது 48).

இவர் காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணி செய்து வந்தார். மேலும் ஓய்வு நேரத்தில் ஆடு மாடு மேய்ப்பது மற்றும் வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார். இதுதவிர பணம் கொடுக்கல், வாங்கல் தொழிலிலும் ஈடுபட்டிருந்தார்.

இவரிடம் சேர்வார் ஊரணி பகுதியை சேர்ந்த பிரகாஷ் மனைவி அம்சவல்லி பணம் வாங்கி உள்ளார். அதனை திருப்பி செலுத்தாததால் அம்ச வள்ளி வீட்டிற்கு சென்று லட்சுமணன் கேட்டுள்ளார்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பணத்தை இப்போது தர முடியாது நான் தரும்போது வாங்கி கொள்ளுங்கள் என்று அம்சவல்லி கூறி உள்ளார்.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அம்சவல்லி, அவரது மாமனார் சரவணன் ஆகியோர் லட்சுமணனின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவியிடம், உன் கணவர் இனிமேல் பணம் கேட்டு என் வீட்டிற்கு வந்தால் நடப்பதே வேறு என்று மிரட்டி உள்ளனர்.

நேற்று இரவு கழனி வாசல் சாலையில் லட்சுமணன் சைக்கிளில் வந்தார். அப்போது அவரை 3 வாலிபர்கள் வழிமறித்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் லட்சுமணன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

இந்த சம்பவத்தின்போது அவரது மகன் குருபாண்டிக்கும் காயம் ஏற்பட்டது. அவரை மிரட்டி விட்டு கொலை கும்பல் தப்பி ஓடியது. ரத்த வெள்ளத்தில் கிடந்த லட்சுமணனை காப்பாற்ற முயன்றபோது அவர் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார்.

அம்சவல்லி, சரவணனின் தூண்டுதலின்பேரில் சேர்வார் ஊரணி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் தான் லட்சுமணனை வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிவந்துள்ளது.

காரைக்குடி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் முத்துகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார். 

Tags:    

Similar News