செய்திகள்
விபத்து

ஈரோட்டில் ஸ்கூட்டர் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு

Published On 2021-10-13 04:30 GMT   |   Update On 2021-10-13 04:30 GMT
ஈரோட்டில் ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் கணவன் கண் முன்னே மனைவி இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
ஈரோடு:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் விட்லாபுரி 3-வது வீதியை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 59). ஜவுளி வியாபாரி. இவருடைய மனைவி மோகனா (55). சுந்தரேசன் ஜவுளி வாங்குவதற்காக தனது மனைவி மோகனாவுடன் ஈரோட்டுக்கு நேற்று ஸ்கூட்டரில் வந்தார். அவர் ஈரோடு பார்க் ரோட்டில் சென்றபோது பின்னால் வந்து கொண்டு இருந்த லாரி எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டரின் மீது மோதியது.

இதில் சுந்தரேசனும், மோகனாவும் நிலைத்தடுமாறி ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார்கள். அப்போது மோகனாவின் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மோகனா பரிதாபமாக இறந்தார். சுந்தரேசன் காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விபத்தில் இறந்த மோகனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா ஆட்டையானூரை சேர்ந்த சங்கர் (45) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஈரோட்டில் கணவன் கண் முன்னே மனைவி இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News