செய்திகள்
தற்கொலை

வேலூர் கோட்டை அகழியில் குதித்து இளம்பெண் தற்கொலை

Published On 2021-09-28 08:18 GMT   |   Update On 2021-09-28 08:18 GMT
வேலூர் கோட்டை அகழியில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:

வேலூர் மக்கான் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கபூர். இவருடைய மகள் சந்தியா (வயது 24). வேலூரில் தனியார் மருத்துவமனையில் உள்ள கேன்டீனில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பளம் குறைவாக தருவதால் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று குடும்பத்தினர் வற்புறுத்தி உள்ளனர். ஆனாலும் அவர் தொடர்ந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். அதனால் சந்தியாவுக்கும், அவருடைய தாயாருக்கும் அடிக்கடி வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை சந்தியா வேலைக்கு செல்ல புறப்பட்டுள்ளார். அப்போது வேலைக்கு செல்வது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் முனமுடைந்த அவர் வீட்டை விட்டு வெளியேறி காலை 9 மணியளவில் கோட்டை நுழைவுவாயில் அருகே அகழி தண்ணீரில் குதித்தார்.

இதைக்கண்ட பொதுமக்கள் வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சந்தியா தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினார்.

அதைக்கண்ட சிலர் அகழியில் இறங்கி அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் தண்ணீரில் மூழ்கிய சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார். தீயணைப்பு வீரர்கள் அங்கு வருவதற்குள் பொதுமக்கள் சந்தியா உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

வேலூர் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோட்டை நுழைவுவாயில் மதில்சுவர் அருகே சந்தியா அணிந்திருந்த கண் கண்ணாடி, சுடிதார் சால்வை, கடிதம் ஒன்று இருந்தது.

அந்த கடிதத்தில், என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இது நானாக சுயமாக எடுத்த முடிவு என்று எழுதப்பட்டிருப்பதாக போலீசார் கூறினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோட்டை அகழியில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News