செய்திகள்
கோப்புபடம்

கிருஷ்ணகிரியில் சிறுத்தை நடமாட்டம் - கிராம மக்கள் பீதி

Published On 2021-09-19 08:52 GMT   |   Update On 2021-09-19 08:52 GMT
கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.ஆர்.பி அணை அருகே உள்ள சிறிய மலைக்குன்றில் சிறுத்தை ஒன்று குட்டியுடன் சுற்றிவருவதை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்துள்ளனர்

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் மொத்த பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு வனப்பகுதிகள் ஆகும் இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், கரடி, சிறுத்தைகள், மான் போன்ற விலங்குகள் உள்ளன, இவை அவ்வப்போது உணவு தேடி அருகே உள்ள கிராமங்களுக்குள் நுழைவது தொடர் சம்பவமாகவே உள்ளது.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.ஆர்.பி அணை அருகே உள்ள சிறிய மலைக்குன்றில் சிறுத்தை ஒன்று குட்டியுடன் சுற்றிவருவதை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்துள்ளனர்.இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தை புலியை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த சிறுத்தை புலி தற்போது இடம்பெயர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள கூசு மலை என்னும் சிறுமலை குன்றில் இருப்பதாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் வெளியே வரும் சிறுத்தை அருகே உள்ள பாஞ்சாலி ஊர் கிராமத்தில் நுழைந்து ஆடு மற்றும் நாய்களை கடித்து இழுத்துச் செல்வதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து வனத்துறை சார்பில் சிறுத்தை புலி பதுங்கி இருப்பதாக கூறப்படும் கூசுமலைகுன்று அருகே கூண்டு வைத்துள்ளனர். அதில் ஒரு நாய்க்குட்டியை கட்டிவைத்து சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுவரையில் சிறுத்தை புலி கூண்டில் சிக்கவில்லை.

பொதுமக்களில் சிலர் அங்கு சென்று பார்த்த போது கூண்டில் நாய் வைக்கப்பட்டு கதவு திறக்கப்படாமல் மூடப்பட்டு உள்ளது. வனத்துறை அலுவலர்கள் முறையாக கண்காணிக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இருப்பினும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பீதியில் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

Tags:    

Similar News