செய்திகள்
திருக்கனூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருக்கனூர் அருகே நோய் கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே சந்தைபுதுக்குப்பம் கர்ணன் தெருவை சேர்ந்தவர் முருகையன். விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்தாலு (வயது48). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது.
இவர் கடந்த 5 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகவில்லை.
இந்த நிலையில் நேற்று இரவு முத்தாலுக்கு நோய் கொடுமை அதிகமானது. இதையடுத்து தன்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு கணவரிடம் கூறினார். அதற்கு முருகையன் காலையில் அழைத்து செல்வதாக தெரிவித்தார்.
ஆனால், அதிக வலியால் துடித்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த முத்தாலு வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் வீட்டின் தோட்டத்தில் உள்ள கொய்யாமரத்தில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலைசெய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது கணவர் முருகையன் கொடுத்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.