செய்திகள்
கடலூர் துறைமுகத்தில் ரூ.135 கோடியில் விரிவாக்க திட்டப்பணிகள் - கலெக்டர் ஆய்வு
கடலூர் துறைமுகத்தில் ரூ.135 கோடியில் நடைபெற்று வரும் விரிவாக்க திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர்:
கடலூர் துறைமுகத்தில் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்பு மூலம் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.135 கோடி மதிப்பீட்டில் விரிவுப்படுத்தும் பணி கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் சென்னை இந்திய தொழில் நுட்ப கழகம் தொழில் நுட்ப ஆலோசனை அதிகாரி மேற்பார்வையின் கீழ் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் துறைமுக விரிவாக்க திட்டமாக 2 தளங்கள், அலைக்கரை மற்றும் ஆழமிடுதல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் முக்கியத்துவமாக 2 புதிய சரக்கு கடல் தளங்கள் மற்றும் 5.68 மெட்ரிக் டன் ஆண்டு ஒன்றுக்கு சரக்கு கையாளும் திறன் கொண்டதாக அமைய உள்ளது.
இந்த துறைமுகம் விரிவாக்கம் செய்வதால் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதன் மூலம் தொழிற் சாலைகளின் வளர்ச்சி மற்றும் சரக்கு கையாளுதல் திறன் அதிகரிக்கும். இந்த திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, இந்த திட்டப்பணிகளை அடுத்த மாதத்திற்குள் (அக்டோபர்) முழுமையாக முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது செயற்பொறியாளர் (தமிழ்நாடு கடல்சார் வாரியம்) ரவிபிரசாத், துறைமுக கண்காணிப்பாளர் ஜெபருல்லாகான், கடல்சார் வாரிய அலுவலர்கள், மீன்வளத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.