ஏழாயிரம் பண்ணை அருகே திருமணம் நிச்சயக்கப்பட்ட மணப்பெண் மாயம்
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள கோட்டை பட்டியை சேர்ந்தவர் வனிதா (வயது 38). இவரது மகள் ஷோபனா (19) பிளஸ்-2 முடித்துள்ள இவர் தனது தாயுடன் பட்டாசு கம்பெனி வேலைக்கு சென்று வந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சந்தை முருகன் என்பவருக்கும் ஷோபனாவுக்கு காதல் ஏற்பட்டது. இது தெரிய வந்ததும் குடும்பத்தினர் கண்டித்தனர். மேலும் மதுரையை சேர்ந்த சரவணன் என்பவருடன் ஷோபனாவுக்கு கடந்த 29-ம் தேதி திருமணம் நிச்சயமானது.
இந்த நிலையில் நேற்று வேலைக்கு சென்ற ஷோபனா பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீசில் புகார் செய்யப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சந்தை முருகன் வீட்டிற்கு சென்றபோது அவரும் மாயமாகி இருந்தார்.
எனவே அவர்தான் ஷோபனாவை கடத்தி இருக்கலாம் என கருதப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.