செய்திகள்
சுபாஷ், பரத்

ஒரு நிமிடத்தில் 100 தோப்புக்கரணம் போட்டு அண்ணன்-தம்பி சாதனை

Published On 2021-09-15 07:31 IST   |   Update On 2021-09-15 07:31:00 IST
ஆந்திராவைச் சேர்ந்த ஹேமந்த் என்ற மாணவன் ஒரு நிமிடத்தில் நாற்காலியின் மேல் நின்று 41 முறை தோப்புக்கரணம் போட்டு உலக சாதனை படைத்துள்ளார்.
ஈரோடு :

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் முத்துராமன். அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன்கள் சுபாஷ், பரத். சத்தியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சுபாஷ் 8-ம் வகுப்பும், பரத் 11-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் கொடைக்கானலை சேர்ந்த பிளஸ்-2 மாணவன் அஜய் பிரசன்னா ஒரு நிமிடத்தில் 82 தடவை தோப்புக்கரணம் போட்டு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஒரு நிமிடத்தில் 88 தோப்புக்கரணம் போட்டு ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளார்.

இதுபோல ஆந்திராவைச் சேர்ந்த ஹேமந்த் என்ற மாணவன் ஒரு நிமிடத்தில் நாற்காலியின் மேல் நின்று 41 முறை தோப்புக்கரணம் போட்டு உலக சாதனை படைத்துள்ளார். இந்த செய்தியை பார்த்த சுபாசும், பரத்தும் உலக சாதனை படைக்க நாமும் முயற்சிக்க வேண்டும் என முடிவெடுத்தார்கள். இதற்காக நாள்தோறும் காலை கடும் பயிற்சியில் ஈடுபட்டார்கள்.

இந்தநிலையில் சுபாஷ் ஒரு நிமிடத்தில் 100 தோப்புக்கரணம் போட்டு சாதனை படைத்தார். அதுபோல பரத் நாற்காலி மேல் நின்று 93 முறை தோப்புக்கரணம் போட்டு உலக சாதனை படைத்துள்ளார்.

இதை அப்துல்கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற அமைப்பு பதிவு செய்துள்ளது.

Similar News