செய்திகள்
தற்கொலை

செல்போனில் ‘வீடியோ கேம்’ விளையாட்டுக்கு அடிமையான வாலிபர் தற்கொலை

Published On 2021-09-14 04:24 GMT   |   Update On 2021-09-14 04:24 GMT
ஈரோட்டில் செல்போனில் ‘வீடியோம் கேம்’ விளையாட்டுக்கு அடிமையான வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:

ஈரோடு பழைய பூந்துறை ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. இவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் ஸ்ரீராம் (வயது 22) 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு அவரது தந்தையுடன் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார். கடந்த 6 மாதங்களாக ஸ்ரீராம் செல்போனில் அதிகமாக ‘வீடியோ கேம்’ விளையாடிக்கொண்டு இருந்தார். காலப்போக்கில் அதற்கு அடிமையான ஸ்ரீராம் இரவிலும் தூங்காமல் நீண்ட நேரமாக விளையாடினார்.

அதனால் இரவிலும் தூங்காமல் எதற்காக செல்போனை பார்த்து கொண்டே இருக்கிறாய் என்று அவருடைய தந்தை கண்டித்து உள்ளார். ஆனால் அதற்கும் பதில் கூறாமல் ஸ்ரீராம் தொடர்ந்து செல்போனில் விளையாடிக்கொண்டு இருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றிருந்தார்கள். அப்போது ஸ்ரீராம் மட்டும் வீட்டில் இருந்தார். அதன்பிறகு கடைக்கு சென்றிருந்த ஸ்ரீராமின் தம்பி லட்சுமணன் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த லட்சுமணன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அங்கு ஸ்ரீராம் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ஸ்ரீராமை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஸ்ரீராம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ‘வீடியோ கேம் விளையாட்டுக்கு அடிமையானதால் ஸ்ரீராம் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்,’ என தெரியவந்தது. எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News