செய்திகள்
கோப்புபடம்

பண்ருட்டி அருகே பெண் அடித்துக் கொலை - வாலிபர் உள்பட 2 பேர் கைது

Published On 2021-09-12 17:58 GMT   |   Update On 2021-09-12 17:58 GMT
பண்ருட்டி அருகே பெண்ணை அடித்துக் கொலை செய்த வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:

பண்ருட்டி அருகே உள்ள கருக்கை கிராமத்தை சேர்ந்தவர் சாரங்கபாணி (வயது 40). மினி லாரி டிரைவரான இவர் நேற்று முன்தினம் வாடகைக்கு சென்று விட்டு நள்ளிரவு வீட்டுக்கு வந்தார். அப்போது குடிபோதையில் இருந்த அவர் தனது வீட்டுக்கு செல்லமால் எதிரே உள்ள வீட்டின் கதவை தட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வீட்டில் இருந்த தனபால் (50), ஏழுமலை மகன் சதீஷ்குமார் (26) ஆகியோர் சாரங்கபாணியிடம் குடிபோதையில் வந்து நள்ளிரவில் ஏன் வீட்டின் கதவை தட்டுகிறாய்? என கேட்டனர். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது தனபால், சதீஷ்குமார் ஆகியோர் சாரங்கபாணியை தாக்கினர். இதைபார்த்த சாரங்கபாணியின் அண்ணி ராஜாத்தி(50) ஓடிவந்து தகராறை விலக்கி விட முயன்றார். இதில் மேலும் ஆத்திரமடைந்த தனபால், சதீஷ்குமார் ஆகியோர் ராஜாத்தியை சரமாரியாக தாக்கிவிட்டு, அங்கிருந்து ஓடிவிட்டனர். இதில் மயங்கி விழுந்த ராஜாத்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜாத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, வெளியூர் தப்பிச் செல்வதற்காக ஏரிப்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த தனபால், சதீஷ்குமாரை கைது செய்தனர். தகராறை விலக்கி விட சென்ற பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News