செய்திகள்
முக ஸ்டாலின்

இந்தியாவின் வரலாறு இனி, தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் பேச்சு

Published On 2021-09-09 10:15 GMT   |   Update On 2021-09-09 10:15 GMT
அகழாய்வின்போது கிடைத்த அரிய பொருட்களை அழகுறக் காட்சிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலி நகரில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளோடு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் கூறினார்.
சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விதி 110-ன்கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

'வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்ற உணர்வை நமக்கெல்லாம் ஏற்படுத்திய தமிழினத் தலைவர் கலைஞர் போற்றிய செம்மொழியாம் தமிழ்மொழியின் பெருமையை, உலகத்துக்கு நாகரிகத்தையும், பண்பாட்டையும் கற்றுக்கொடுக்க, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வலம் வந்த தமிழினத்தின் சிறப்பை பறைசாற்றும் அறிவிப்பு ஒன்றை, விதி எண் 110-ன்கீழ் இந்த மன்றத்தில் தங்களுடைய அனுமதியோடு பெருமையாக நான் வெளியிடுகிறேன்.
 
கடந்த நான்குமாத காலமாக, தி.மு.க. அரசு ஆற்றி வரும் தமிழ்ப் பணியை மீண்டும் நான் உங்களுக்கு நினைவூட்டத் தேவையில்லை.  மன்னர்கள் பலர் இந்தியாவை தங்கள் குடையின்கீழ் கொண்டு வந்து ஆண்டபோதும், தனிக்குடையின்கீழ் ஆளுகை செலுத்திய மண் இந்தத் தமிழ் மண்.  பண்டைய நாகரிகம் கொண்டது தமிழ்மண் என்பதற்கு சான்றுகள் பல உள்ளன.  

இவையெல்லாம் ஏதோ சில இலக்கிய ஆதாரங்களை வைத்து மட்டும் நான் சொல்லவில்லை.  அசைக்க முடியாத தொல்லியல் சான்றுகள் இருக்கின்றன. இவை அனைத்தும் யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத சான்றுகள் ஆகும்.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் தற்போது நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சி உலக அரங்கில் அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கிறது. தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை அள்ளிக்கொடுக்கும் கீழடியில் நடைபெற்று வந்த அகழ்வாராய்ச்சியை ஒன்றிய அரசு பாதியிலேயே கைவிட்டபோது, கலைஞர் அதற்கு எதிராக, தனது கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்தார்.  

நானும் கடந்த 2019-ம் ஆண்டு, கீழடிக்கு நேரடியாகச் சென்று, அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த அகழாய்வுப் பணிகளைப் பார்வையிட்டேன்.  வியக்கவைக்கும் செங்கல் கட்டுமானங்கள், கருப்பு மற்றும் சிவப்பு வண்ணம் தாங்கிய பானை ஓடுகள், அரிய கல்மணிகள், தங்க அணிகலன்கள், சிந்துவெளி நாகரிகக் காலத்தில் காணப்பட்ட அதே திமில் கொண்ட காளையின் எலும்புகள், விளையாட்டுப் பொருட்கள், தொழிற்பகுதிகள்  என ஒரு செழுமைமிக்க சமூகமாக, சங்ககாலத் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நாம் மட்டுமல்ல, உலகமே அறிந்து கொண்டது.

அதுமட்டுமல்ல; கரிமப் பகுப்பாய்வு முடிவுகளின்படி, கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற சமூகமாகச் சங்ககாலத் தமிழர்கள் விளங்கினர் என்பதும் உறுதியானதை இம்மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.  

அந்தவகையில், ‘கீழடி’என்ற ஒற்றைச்சொல் உலகத் தமிழர்களை ஒன்றிணைத்தது என்றே சொல்லவேண்டும்.  அதே உணர்வைத் தாங்கி தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்டசோழபுரம் ஆகிய இடங்களில் தற்போது அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அப்போது கிடைத்த பல்வேறு பழமைவாய்ந்த பொருட்கள் குறித்து, அகில இந்திய அளவில் புகழ்பெற்ற தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைத் தமிழ்நாடு தொல்லியல் துறை கலந்தாலோசித்தது.  அதன்படி, கீழ்க்கண்ட முக்கிய முடிவுகளை வெளியிடுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

* கீழடியில் சூரியன், நிலவு மற்றும் வடிவியல் குறியீடுகள் கொண்ட முத்திரைகளுடன் கூடிய வெள்ளிக்காசு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதை ஆய்வுசெய்த தலை சிறந்த நாணயவியல் அறிஞரும், கொல்கத்தா பல்கலைக்கழகப் பேராசிரியருமான சுஷ்மிதா பாசு மசும்தார், இந்த வெள்ளி முத்திரைக் காசு, கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கு, அதாவது, மவுரியப் பேரரசர் அசோகர் காலத்திற்கும் முற்பட்டது என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.  

* ஏற்கெனவே, கரிம பகுப்பாய்வு முடிவுகளின்படி, கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தமிழி எழுத்துக்களின் காலம், கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதை வலுப்படுத்தும் விதமாக, தற்போது பெறப்பட்ட இரண்டு கரிம மாதிரிகளின் பகுப்பாய்வு முடிவுகளிலும், கீழடி நாகரிகம் கி.மு. 6-ம் நூற்றாண்டைச் சார்ந்தது எனத் தெரியவந்துள்ளது என்ற செய்தியை நான் பெருமையோடு இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

* முந்தைய அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற கரிமப் பகுப்பாய்வுகளின் காலக் கணக்கீட்டு முடிவுகளின்படி, கி.மு. எட்டாம் நூற்றாண்டிற்கு முன்பாகவே, கொற்கை ஒரு துறைமுகமாகச் செயல்பட்டு வந்தது என்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வில் கருப்பு வண்ணப்பூச்சு பெற்ற கங்கைச் சமவெளியைச் சார்ந்த பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

இவற்றைக் கவனமாக ஆய்வுசெய்த இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் முனைவர் ராகேஷ் திவாரி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் ரவீந்திரநாத் சிங் ஆகியோர், கொற்கைத் துறைமுகமானது கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே வெளிநாடுகளுடனும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

* இவற்றுக்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில், ஒரு முக்கிய ஆய்வு முடிவை இங்கு நான் வெளியிட விரும்புகிறேன். தமிழ்நாடு தொல்லியல் துறையால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வின்போது ஆதிச்சநல்லூருக்கு அருகே, சிவகளைப் பறம்புப் பகுதியில் வெளிப்பட்ட முதுமக்கள் தாழி ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகள் அமெரிக்க நாட்டின் மயாமி நகரத்தில் அமைந்திருக்கும் உலகப்புகழ் பெற்ற ‘பேட்டா அனாலிட்டிக்கல் லேரட்டரி’ -க்குப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அதன் ஆய்வு முடிவுகள் சமீபத்தில் கிடைத்துள்ளன.  

ஏ.எம்.எஸ். கரிம பகுப்பாய்வு  முறையில் ஆய்வு செய்ததில், முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகளின் காலம் கி.மு. 1155 எனக் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, ‘தண்பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்ய முடிகிறது என்பதைத் தமிழ்கூறும் நல்லுலகம் அறியும் வகையில், இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் அளவிட முடியாத பெருமிதமும், மனமகிழ்ச்சியும் நான் கொள்கிறேன்.  

பண்டைய தமிழர்களின் செழுமையான பண்பாடு, கடல்வழி வணிகம், நீர் மேலாண்மை, இரும்பு உருக்குதல், அரிய மணிகள் தயாரித்தல், முத்துக்குளித்தல் போன்ற தொழில் நுட்பங்களை உலகம் அறிந்துகொள்ளத் தேவையான சான்றுகளைச் சேகரிக்கும் வகையில், இந்தியாவில் வேறெந்த மாநிலத்தை விடவும் அதிக அளவு நிதியாக ஐந்து கோடி ரூபாய் நடப்பு நிதியாண்டில் அகழ்வாராய்ச்சிப் பணிக்காகவும், ஆழ்கடல் அகழாய்வுக்காகவும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பதை, மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.

அதன் தொடர்ச்சியாக, ஆதிச்ச நல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது கிடைத்த அரிய பொருட்களை அழகுறக் காட்சிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலி நகரில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளோடு அருங்காட்சியகம் அமைக்கப்படும்.  இது ‘பொருநை அருங்காட்சியகம்’என அழைக்கப்படும்.

இதுமட்டுமல்ல; தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி, இந்தியத் துணைக்கண்டமெங்கும்; அதேபோல் கடல்கடந்து பயணம் செய்து தமிழர்கள் வெற்றித்தடம் பதித்த வெளிநாடுகளிலும்; தமிழ்நாடு தொல்லியல் துறை உரிய அனுமதிகள் பெற்று இனி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் என்பதை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.  
    
முதற்கட்டமாக, சங்ககாலத் துறைமுகமான முசிறி, தற்போது பட்டணம் என்ற பெயரில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது.  சேரநாட்டின் தொன்மையினையும், பண்பாட்டினையும் அறிந்துகொள்ளும் வகையில், கேரள மாநிலத் தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து அங்கு ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும்.

அதேபோல், ஆந்திர மாநிலத்திலுள்ள வேங்கி, கர்நாடக மாநிலத்தின் தலைக்காடு மற்றும் ஒடிசா மாநிலத்திலுள்ள பாலூர் ஆகிய வரலாற்றுச் சிறப்புடைய இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அன்றைய ரோமப்பேரரசின் ஒருபகுதியாக விளங்கிய எகிப்து நாட்டிலுள்ள குசிர்-அல்-காதிம் மற்றும் பெர்னிகா, மேலும் ஓமான் நாட்டின் கோர் ரோரி ஆகிய இடங்களில் பழந்தமிழகத்தோடு இருந்த வணிகத் தொடர்பை உறுதிசெய்யும் வகையில், தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அந்தப் பகுதிகளில், அந்தந்த நாட்டின் தொல்லியல் வல்லுநர்களோடு இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

மாமன்னர் ராசேந்திர சோழன் வெற்றித் தடம் பதித்த தென்கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் அந்தந்த நாட்டுத் தொல்லியல் வல்லுநர்கள் துணையோடு, உரிய அனுமதி பெற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என உலகிற்கு அறிவித்த தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி, இனி உலகெங்கும் பயணம் செய்வோம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி, தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதைச் சான்றுகளின் அடிப்படையில், அறிவியல் வழிநின்று நிறுவுவதே நமது அரசினுடைய தலையாய கடமை என்பதை இம்மாமன்றத்தின் மூலம் உலகிற்கு அறிவிப்பதில், உலகிற்கு எடுத்துக்காட்டாக எடுத்துச் சொல்வதில் பெருமிதம் கொண்டு, அந்தப் பெருமையோடு அமைகிறேன்.  வணக்கம்.  

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News