அறந்தாங்கி அருகே இடி விழுந்த அதிர்ச்சியில் பெண் பலி
அறந்தாங்கி:
அறந்தாங்கி தாலுகா ரெத்தினக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கநாதன் மனைவி ஜோதி (வயது 60). இவரும் அதே ஊரைச் சேர்ந்த லலிதா (80) என்ற மூதாட்டியும் அருகே உள்ள மேய்ச்சல் நிலத்தில் ஆடு மேய்க்க சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக இவர்கள் நின்று கொண்டிருந்த பகுதியில் பலத்த சத்தத்துடன் இடி மின்னல் தாக்கியுள்ளது. இதில் இடி சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைப்பார்த்த லலிதா மயக்கமடைந்தார். அதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த துறை அதிகாரிகள் ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயக்க நிலையில் இருந்த லலிதா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே பிரேத பரிசோதனையை விரைவாக செய்து உடலை ஒப்படைக்கக்கோரி இறந்த ஜோதியின் உறவினர்கள் சிறிது நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆடு மேய்க்க சென்று பெண் மணி ஒருவர் இடி விழுந்த அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.