செய்திகள்
வீட்டின் பீரோவை திறந்து 20 பவுன் நகை திருட்டு
ஆற்காட்டில் வீட்டின் பீரோவை திறந்து 20 பவுன் நகை திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்புகானா பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி (வயது 48). இவருடைய மகள் பாரதிக்கு சீமந்த விழா கடந்த மாதம் 28-ந் தேதி நடந்தது.
அதற்காக வீட்டைப் பூட்டிக்கொண்டு வாலாஜாவை அடுத்த ஓச்சேரி பகுதிக்கு சென்றார். பின்னர் உறவினர்களுடன் ஆற்காட்டில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.
இந்த நிலையில் மகளின் பிரசவ சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற பணம் தேவைப்பட்டது. அதற்காக வீட்டில் இருந்த நகைகளை அடகு வைக்கலாம் எனக்கருதி பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 20 சவரன் தங்க நகைகள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பார்வதி ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார் அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.