செய்திகள்
இலுப்பூர், விராலிமலையில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
அன்னவாசல்:
இலுப்பூர் கடைவீதியில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி முன்னிலையில் சின்னக்கடைவீதி, பஸ்நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவலை முழுமையாக தடுக்க கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிகளில் ஈடுபடுவோர் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் முககவசம் அணியாத வாகன ஓட்டிகள், பொதுமக்கள், வியாபாரிகளுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முககவசம், சமூக இடைவெளிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. இதில் இலுப்பூர் துணை சூப்பிரண்டு அருள்மொழி அரசு, இன்ஸ்பெக்டர் உஷாநந்தினி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
விராலிமலை பஸ் நிலையம், சோதனைச் சாவடி ஆகிய பகுதிகளில் தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கொரோனா கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.