செய்திகள்
ஈரோடு அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
ஈரோடு அருகே கால் டாக்சியும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார்.
ஈரோடு:
பவானி மல்லாண்டிபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 35). இவருடைய தம்பி தீபக் (31). இவர்கள் 2 பேர் மற்றும் சத்தியமங்கலத்தை சேர்ந்த குமரேசன் (33) ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு ஈரோடு அருகே ஆனைக்கல்பாளையத்தில் இருந்து திண்டல் நோக்கி ரிங்ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கால் டாக்சியும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் படுகாயம் அடைந்த தீபக், குமரேசன் ஆகியோரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த சந்தோஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.