செய்திகள்
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் மருந்து பெட்டகங்கள் - கலெக்டர் வழங்கினார்
பேரணாம்பட்டு ஒன்றியத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பொதுமக்களுக்கு மருந்து பெட்டகங்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.
பேரணாம்பட்டு:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் நேற்று முன்தினம் மக்களை தேடி மருத்துவ திட்டம் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று பேரணாம்பட்டு ஒன்றியம் எம்.வி.குப்பம் கிராமத்தில் தொற்றா நோய் உள்ளவர்களுக்கு மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சர்க்கரை, ரத்த அழுத்தம் நோய்க்கான மருந்து பெட்டகங்களை வழங்கி, ஆய்வு செய்து பொதுமக்களிடம் திட்டம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் கொத்தப்பல்லி கிராமத்தில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.42.9 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கொத்தப் பல்லி - ஓங்குப்பம் தார் சாலையை பார்வையிட்டு, தரம், அளவு குறித்து ஆய்வு செய்தார்.
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய வரைப்படம், பதிவேடுகளை ஆய்வுசெய்து, தாலுகா அலுவலகத்தில் முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளி மனுக்கள் குறித்து ஆய்வு செய்து மனுக்கள் மீது விசாரணை நடத்தி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன், சப்- கலெக்டர் தனஞ்செயன், தாசில்தார் வெங்கடேசன், வட்டார மருத்துவ அதிகாரி கலைச்செல்வி, ஒன்றிய ஆணையாளர்கள் ஹேமலதா, கோபி, ஒன்றிய உதவி பொறியாளர்கள் குகன், சிலம்பரசன் ஆகியோர் உடனிருந்தனர்.