செய்திகள்
நோய் தாக்கம் இல்லாத தாய்மார்கள் தாய்ப்பால் தானம் செய்யலாம் - டீன் பூவதி பேச்சு
நோய் தாக்கம் இல்லாத தாய்மார்கள் தாய்ப்பால் தானம் செய்யலாம் என புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி டீன் பூவதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அங்கமான அரசு ராணியார் மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மருத்துவக்கல்லூரி டீன் பூவதி தலைமை தாங்கினார். மேம்படுத்தப்பட்ட தாய் சேய் நல மையத்தின் ‘தாய்ப்பால் கொடுக்கும் கொள்கை’ கையேட்டினை வெளியிட்டு அவர் பேசுகையில், ``தாய்ப்பால் கொடுப்பது பெற்றோரின் பங்கு மட்டுமல்ல சமுதாயத்தின் பங்கு. தாய்ப்பால் கொடுக்கும் பழக்கத்தை பாதுகாப்பது நம் அனைவருக்குமான பொறுப்பு. நோய்தாக்கம் இல்லாத தாய்மார்கள் அனைவரும் தாய்ப்பால் தானம் செய்யலாம். தானமாக பெறப்பட்ட தாய்ப்பால் தேவையான பரிசோதனைகளுக்கு பிறகு பதப்படுத்தப்பட்டு சேமிக்கப்பட்டு பிறகு தேவைப்படும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும்'' என்றார்.
விழாவில் சிசு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பிய 1 கிலோவிற்கும் குறைவான எடையுடன் பிறந்த 10 குழந்தைகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. தாய்மார்கள் எழுப்பிய தாய்ப்பால் பற்றிய சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்பட்டது.
விழாவில் மருத்துவ கண்காணிப்பாளர் ராஜ்மோகன், மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் கலையரசி, நிலைய மருத்துவ அதிகாரி இந்திராணி, குழந்தைகள் நலப் பிரிவு துறைத்தலைவர் ஸ்ரீதர் மற்றும் மகப்பேறு மருத்துவத்துறைத் தலைவர் அமுதாஉள்பட அனைவரும் தாய்பால் வார விழாவின் உறுதிமொழி ஏற்றனர். முன்னதாக குழந்தைகள் மருத்துவர் இங்கர்சால் வரவேற்று பேசினார். முடிவில் பச்சிளங்குழந்தைகள் பிரிவு மருத்துவர் பீட்டர் நன்றி கூறினார்.
இதேபோல் கீரனூரை அடுத்த உப்பிலியக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தும், குழந்தைகளுக்கு புத்தாடைகளும் அரிமா சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரிமா சங்க தலைவர் ஜான் கென்னடி, வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா, அரசு டாக்டர்கள் ராமமூர்த்தி, ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அறந்தாங்கி அரசு மருத்துவனையில் தலைமை மருத்துவர் சேகர் தலைமையில் தாய்ப்பால் வார விழா நடைெபற்றது. இதில் குழந்தைகள் நல மருத்துவர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.