செய்திகள்
கைது

சிவகாசியில் வேன் டிரைவர் கொலையில் 5 பேர் கைது

Published On 2021-08-05 13:01 IST   |   Update On 2021-08-05 13:01:00 IST
ஆனந்தகுமாரிடம் மருந்து கடை விற்பனையாளர்கள் உனது தாயார் பெயரில் தினேஷ்குமார் அடிக்கடி மாத்திரை வாங்குவதாக தெரிவித்துள்ளனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், சிவகாசி தெய்வானை நகரைச் சேர்ந்தவர் ஆனந்த குமார் (வயது 32). இவர் அங்குள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார்.

நேற்று வேன் நிறுத்தத்தில் இருந்து ஆனந்தகுமார் வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்கள் அங்கு வந்தன. அதில் இருந்தவர்கள் ஆனந்தகுமாரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். பின்னர் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.

அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த ஆனந்தகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் கிடைத்ததும் சிவகாசி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கொலை தொடர்பாக ஆனந்தகுமாரின் நண்பர் தினேஷ்குமார் (21), மகேந்திரன் (22), செண்பகராஜன் (24), ஹரிபிரசாத் (22), வெங்கடேஷ்குமார் (21) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கைதான 5 பேரும் கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

கொலை செய்யப்பட்ட ஆனந்தகுமார் வீட்டிற்கு நண்பர் என்ற முறையில் தினேஷ்குமார் வருவது வழக்கம்.

அப்போது ஆனந்த குமாரின் தாயார் மாத்திரை சாப்பிடுவதை பார்த்துள்ளார். இதை வைத்து அவர் அந்தப்பகுதியில் உள்ள மருந்து கடைகளில் அடிக்கடி தூக்க மாத்திரை வாங்கியுள்ளார். இதனை ஆனந்தகுமாரின் தாயாருக்கு என கூறி வாங்கிச் சென்றுள்ளார்.

அந்த மாத்திரையை வேறு சில மாத்திரைகளோடு சேர்த்து போதை மாத்திரையாக தினேஷ்குமார் பயன்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில் ஆனந்தகுமாரிடம் மருந்து கடை விற்பனையாளர்கள் உனது தாயார் பெயரில் தினேஷ்குமார் அடிக்கடி மாத்திரை வாங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்தகுமார் நேரடியாக தினேஷ்குமாரை சந்தித்து இது பற்றி கேட்டார். அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

இந்த முன் விரோதத்தில் தான் தினேஷ்குமார் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆனந்தகுமாரை வெட்டிக்கொலை செய்துள்ளார்.

இவ்வாறு போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Similar News