செய்திகள்
கோப்புபடம்

திருமானூர் அருகே தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்த சிறுவன் - போலீசார் விசாரணை

Published On 2021-08-01 15:08 IST   |   Update On 2021-08-01 15:08:00 IST
திருமானூர் அருகே சிறுவன் தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தட்டாஞ்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி ரஞ்சிதா. இவர்களுக்கு ஹரீஸ், சந்தீப் ேராஷன்(வயது 4) என 2 மகன்கள். கடந்த ஆண்டு ரஞ்சிதா இறந்துவிட்ட நிலையில், மகன்களுடன் மணிகண்டன் வசித்து வந்தார்.

இதில் சந்தீப் ரோஷன் பெரும்பாலும் வண்ணம்புத்தூரில் உள்ள அவனது பாட்டி வீட்டில் இருப்பது வழக்கம். அதன்படி அங்கிருந்த சந்தீப் ரோஷனை நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு மணிகண்டன் அழைத்து வந்தார். நேற்று மணிகண்டன் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் சந்தீப் ரோஷன் தனியாக இருந்தான்.

இந்நிலையில் வீட்டிற்கு வெளியே உள்ள தண்ணீர் தொட்டியில் சந்தீப் ரோஷன் பிணமாக மிதந்ததை கண்ட அக்கம், பக்கத்தினர் இது குறித்து மணிகண்டன் மற்றும் சந்தீப் ரோஷனின் பாட்டிக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தீப் ரோஷனின் பாட்டி, தனது பேரன் சாவில் சந்தேகம் உள்ளதாக வெங்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து, சந்தீப் ரோஷனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News