செய்திகள்
காஞ்சிபுரம் பேராசிரியை கொலையில் உடற்கல்வி ஆசிரியர் கைது
காஞ்சிபுரத்தில் பேராசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (வயது40). திருமணம் ஆகாத இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 10-ந்தேதி இரவு வீட்டில் உள்ள அறையில் அனிதா மர்மமாக இறந்து கிடந்தார். அவரது வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
மேலும் அனிதாவின் உடலிலும் காயங்கள் இருந்தன. இதுபற்றி காஞ்சி தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அனிதாவின் செல்போனுக்கு கடைசியாக பேசியவர்கள் விவரத்தை போலீசார் சேகரித்தனர். இதில் காஞ்சிபுரம் பாண்டபெருமாள் கோவில் சன்னதி தெருவைச் சேர்ந்த சுதாகர் என்பவர் பேராசிரியை அனிதாவிடம் அடிக்கடி பேசி இருப்பது தெரிந்தது.
சுதாகர் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரிடம் நடத்திய விசாரணையில் பேராசிரியை அனிதாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
சுதாகருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் அனிதாவுடன் அவர் நெருங்கி பழங்கி இருக்கிறார். இந்த நிலையில் தன்னை 2-வதாக திருமணம் செய்து கொள்ள அனிதா வற்புறுத்தியதாக தெரிகிறது.
இதில் ஏற்பட்ட தகராறில் அனிதாவை சுதாகர் கொலை செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலைக்கு வேறு யாரேனும் உதவினார்களா? கொலை நடந்தது எப்படி? என்பது குறித்து கைதான சுகதாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி பேராசிரியை கொலையில் உடற்கல்வி ஆசிரியர் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.