செய்திகள்
பழங்குடியின கிராமத்திற்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்வது ஏன்? -ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
புதுச்சேரியில் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரி:
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பையும் கவனித்துவருகிறார். நேற்று புதுச்சேரியில் தடுப்பூசி திருவிழாவை தொடங்கி வைத்த அவர், புதுச்சேரியில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்படுவதாகவும், ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை இலக்காக கொண்டு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுவதாகவும் கூறினார்.
இந்நிலையில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், திட்டமிட்டபடி புதுச்சேரியில் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என்றார்.
‘தடுப்பூசி போடுவதில் தெலுங்கானா மாநிலமும் முன்னேறி வருகிறது, ஆனால் பணியை விரைந்து முடிப்பதில் ஒரு சிக்கல் உள்ளது. அதிகமான பழங்குடியினர் உள்ளதே இதற்கு காரணம். அவர்கள் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ள தயங்குகிறார்கள்.
எனவே, நாளை நான் ரங்காரெட்டியில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்திற்குச் சென்று அவர்களிடையே தடுப்பூசி செலுத்திக்கொள்கிறேன். நாளை பழங்குடி சகோதர- சகோதரிகளுடன் இருப்பேன். நான் அங்கு சென்று அவர்களுடன் தடுப்பூசி போட்டுக்கொள்வதால், அவர்களும் தடுப்பூசி போடுவார்கள்’ என நம்பிக்கை தெரிவித்தார் தமிழிசை சவுந்தரராஜன்.