செய்திகள்
ஊரடங்கு தளர்வு - மெட்ரோ ரெயில் சேவை ஒரு மணி நேரம் நீட்டிப்பு
பயணிகள் முக கவசம் அணியாவிட்டாலோ அல்லது முக கவசத்தை சரியாக அணியவில்லை என்றாலோ உடனடி அபராதமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், வசதிக்காகவும் வரும் திங்கட்கிழமை முதல் வார நாட்களில் (திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை) மெட்ரோ ரெயில் சேவைகள் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட உள்ளன.
நெரிசல்மிகு நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
கடந்த மாதம் 21-ம் தேதி முதல் கடந்த 9-ம் தேதி வரை 40 பயணிகளிடம் இருந்து அபராதமாக ரூ.8 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளதால் நாளை முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது. அதாவது ஒரு மணி நேரம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.