செய்திகள்
விபத்து

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தந்தை- மகள் காயம்

Published On 2021-07-09 14:54 IST   |   Update On 2021-07-09 14:54:00 IST
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தந்தை - மகள் காயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

அரியாங்குப்பம் அருந்ததிபுரம் ஆனந்தம் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50). கட்டிட தொழிலாளி.

சம்பவத்தன்று இவர் மரப்பாலம் 100 அடி ரோட்டில் இருந்து தனது மகள் பார்வதி (24) என்பவரை மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.

மரப்பாலம் சிக்னல் மின்துறை அலுவலகம் அருகே வந்த போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக ராமச்சந்திரன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த ராமச்சந்திரனும், அவரது மகள் பார்வதியும் காயம் அடைந்தனர்.

உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வெளிப்புற நோயாளியாக சிகிச்சை பெற்ற இருவரும் பின்னர் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இந்த விபத்து குறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் புதுவை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுவை கன்னியக்கோவில் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சிவசங்கரன் (26). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று தனக்கு சொந்தமான ஆட்டோவை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். நள்ளிரவு நேரத்தில் அந்த வழியாக வந்த டேங்கர் லாரி நிறுத்தி இருந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது.

இதுகுறித்து சிவசங்கரன் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News