செய்திகள்
மோசடி

வில்லியனூர் அருகே டாக்டரிடம் கறவை மாடுகளை வாங்கி மோசடி

Published On 2021-07-08 15:07 IST   |   Update On 2021-07-08 15:07:00 IST
வில்லியனூர் அருகே டாக்டரிடம் கறவை மாடுகளை வாங்கி மோசடி செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

வில்லியனூர் அருகே உருவையாறு காலனி திருக்காஞ்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவபெருமாள். டாக்டரான இவர் அரியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் தனது வீட்டில் ஏராளமான கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். அந்த கறவை மாடுகளை சிவபெருமாளின் தாயார் பராமரித்து வந்தார்.

இதற்கிடையே சிவபெருமாளின் தாயார் உடல் நலக்குறைவால் பசுமாடுகளை பராமரிக்க முடியாததால் அதனை விற்க சிவபெருமாள் முடிவு செய்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வில்லியனூர் காவேரி நகரை சேர்ந்த பால் கறவை தொழில் செய்து வரும் சங்கர் என்பவர் தான் மிகவும் கஷ்டபடுவதாகவும், குடும்ப நடத்தவே சிரமப்படுவதாக சிவபெருமாளிடம் முறையிட்டார். தனக்கு சில பசுமாடுகளை கொடுத்து உதவி செய்தால் அதன் மூலம் பால் கறந்து தனது குடும்பத்தை நடத்த முடியும் என்று சங்கர் வருத்தத்துடன் கூறினார்.

இதனை கேட்டு மனமிறங்கிய சிவபெருமாள் நம்பிக்கையின் அடிப்படையில் தனது வீட்டில் இருந்த 5 பசு மாடுகள் மற்றும் 2 கன்றுகுட்டிகளை கொடுத்து தான் கேட்கும்போது எந்தவித நிபந்தனையும் இன்றி பசுமாடுகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி ஒப்படைத்தார்.

இந்த நிலையில் சிவபெருமாள் தான் கொடுத்த பசுமாடுகளையும், கன்றுகுட்டிகளையும் திருப்பி கொடுக்கும்படி சங்கரிடம் கேட்டார். ஆனால் அதனை சங்கர் ஒப்படைக்காமல் ஏமாற்றி வந்தார்.

இதையடுத்து சிவபெருமாள் மங்களம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மோசடி வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News