செய்திகள்
கீழ்வேளூரில் சாராயம் கடத்திய அண்ணன்-தம்பி கைது
கீழ்வேளூரில் சாராயம் கடத்திய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் கீழ்வேளூர் ரெயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சாராயம் இருந்தது.
இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கீழ்வேளுர் அருகே பட்டமங்கலம் சொட்டால் வண்ணம் பகுதியை சேர்ந்த ராமு மகன்கள் சபரிநாதன் (வயது 25), ஸ்டாலின் (24) என்பதும், இவர்கள் காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.