செய்திகள்
பூதப்பாண்டியில் ரேஷன் கடையில் ெபாதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்திய போது எடுத்த படம்.

பூதப்பாண்டியில் தரமற்ற அரிசி வழங்குவதாக ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை

Published On 2021-06-25 12:08 GMT   |   Update On 2021-06-25 12:08 GMT
பூதப்பாண்டியில் தரமற்ற அரிசி வழங்கியதாக ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி தெற்கு ரத வீதியில் 2 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் ஒரு கடையில் நேற்று காலையில் பொதுமக்கள் ரேஷன் அரிசி வாங்க சென்றனர். அப்போது கடையில் வழங்கப்பட்ட அரிசி தரமற்று இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் அரிசியை வாங்க மறுத்து ரேஷன் கடையை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்த தோவாளை ஒன்றிய பா. ஜனதா பொதுச் செயலாளர் விஜய மணியன், பொறுப்பாளர் நாகராஜன் மற்றும் அ.தி.மு.க. மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்சன், தொழிற்சங்க செயலாளர் அன்னை யேசுதாஸ் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நடந்து கொண்டிருந்த போது ரேஷன் கடையில் இறக்குவதற்காக அரிசி மூடைகளுடன் ஒரு லாரி வந்தது. லாரியில் இருந்து அரிசி மூடைகளை இறக்குவதற்கு முற்பட்டபோது பொதுமக்கள் அந்த லாரியை சுற்றிவளைத்து அதில் இருந்த அரிசியை சோதனை செய்தனர். அந்த அரிசியும் தரமற்று இருந்ததாக தெரிகிறது.

உடனே, அரிசி மூடைகளை இறக்க விடாமல் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பூதப்பாண்டி வருவாய் ஆய்வாளர் ஜமிலா பானு, கிராம நிர்வாக அதிகாரி மதன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல தரக்கட்டுப்பாடு அதிகாரி பன்னீர்செல்வம், பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

இந்த போராட்டம் குறித்து அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் செல்போன் மூலம் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வுக்கு தகவல் கொடுத்தார். அவர் மாவட்ட கலெக்டர் அரவிந்த் மற்றும் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சொர்ண ராஜுவிடம் செல்போன் மூலம் பேசினார். இதையடுத்து வட்ட வழங்கல் அலுவலர் லாரியில் உள்ள ரேஷன் அரிசிைய திரும்ப எடுப்பதாகவும், நாளை (அதாவது இன்று) வேறு அரிசி மூடைகள் அனுப்புவதாகவும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News