வில்லியனூர் அருகே தொழில் போட்டியில் கேபிள் டிவி உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல்
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே பங்கூர் பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிபாலன் (வயது 40). இவர் அந்த பகுதியில் கேபிள் டி.வி. நடத்தி வருகிறார்.
இதேபோல் அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவரது மகன் சரவண பெருமாள் (25) ஆகியோரும் கேபிள் டி.வி. நடத்தி வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் தொழில் போட்டி காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு விரோதம் இருந்து வந்தது.
இது தொடர்பாக ஏற்கனவே மணிபாலன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். அப்போது ஊர் பஞ்சாயத்தார்கள் தலையிட்டு சமரசம் செய்து வைத்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணிபாலன் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு கேபிள் இணைப்பு கொடுத்து கொண்டு இருந்தார்.
அப்போது வீட்டு உரிமையாளரிடம் மணிபாலன் குறித்து தவறான தகவலை சரவண பெருமாள் கூறியதாக தெரிகிறது.
நேற்று முன்தினம் இரவு அங்குள்ள மாரியம்மன் கோவில் தெருவில் மணி பாலன் நடந்து வந்த போது, சரவண பெருமாள் மற்றும் அவரது தந்தை சீனிவாசன் ஆகியோர் மணிபாலனை தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும் சரவண பெருமாள் இரும்பு பைப்பை எடுத்து வந்து மணிபாலன் தலையில் தாக்கினார்.
அதோடு மணிபாலனை கொலை செய்து விடுவதாக சரவண பெருமாளும், அவரது தந்தை சீனிவாசனும் மிரட்டல் விடுத்தனர். இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயம் அடைந்த மணிபாலன் வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.