செய்திகள்
குன்றத்தூர் அருகே லாரிகள் மோதல் - 2 பேர் பலி
குன்றத்தூர் அருகே லாரிகள் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:
கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் முருகவேல் (வயது 43). லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது லாரியில் மறைமலை நகர் தொழிற்சாலைகளில் உள்ள இரும்பு கழிவுகளை ஏற்றிக்கொண்டு வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, குன்றத்தூர் அருகே வந்து கொண்டிருந்தார். லாரியை டிரைவர் லாரன்ஸ் (47) ஓட்டி வந்தார். அப்போது லாரி பழுதானது.
இதையடுத்து லாரியை சாலையோரமாக நிறுத்தி விட்டு லாரி உரிமையாளர் முருகவேல் அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக் அன்வர் என்பவரை அழைத்து வந்து லாரியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கார்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இதில் முருகவேல், அன்வர் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள். கன்டெய்னர் லாரியின் முன்பக்கம் முழுவதும் நொறுங்கியதால் கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் பிண்டுராய் மற்றும் லாரி டிரைவர் லாரன்ஸ் ஆகியோர் காயம் அடைந்து குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன இருவரின் உடலையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.