தேர்தல் முன்விரோத தகராறில் 6 பேருக்கு அரிவாள் வெட்டு - அதிமுக பிரமுகர் உள்பட 12 பேர் மீது வழக்கு
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவுக்குட்பட்ட அம்மன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பூச்சி என்ற ரவிகாந்த் (வயது 48). தி.மு.க. பிரமுகரான இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா முத்துப்பேட்டையை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் முத்து இருளாண்டி (52) என்பவருக்கும் தேர்தல் முன்விரோதம் மற்றும் மின்சாரம் எடுப்பது சம்பந்தமாக மோதல் இருந்து வந்தது.
நேற்று முத்துப்பட்டி பஸ்நிறுத்தம் அருகே இரண்டு பிரிவினரும் திடீரென மோதிக்கொண்டனர். அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் 2 தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இந்த மோதலில் தி.மு.க.வைச் சேர்ந்த பூச்சி என்ற ரவிகாந்த் மருது (30) ரவி (44) ஆகியோரும் முத்துபட்டியைச் சேர்ந்த முத்து இருளாண்டி அவரது மகன் முத்துராமலிங்கம் (24) கண்ணன் (24) ஆகியோரும் வெட்டு காயம் அடைந்தனர். இரு தரப்பினரும் கமுதி மற்றும் திருச்சுழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
மோதல் நடந்த இடம் திருச்சுழி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மோதல் தொடர்பாக கண்ணன் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதில் கண்ணன் அ.தி. மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.