செய்திகள்
பாலியல் தொல்லை: உடற்கல்வி ஆசிரியர் மீது மேலும் 2 மாணவிகள் புகார்
மயிலாடுதுறையில் உடற்கல்வி ஆசிரியர் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக மேலும் 2 மாணவிகள் புகார் செய்துள்ளனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அண்ணாதுரை (வயது 50) என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் கடந்த 2010-2018 வரை அந்த பள்ளியில் படித்த ஒரு மாணவி உடற்கல்வி பயின்றபோது உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை இரட்டை அர்த்தத்தில் பேசியும் பாலியல் தொல்லை செய்ததாகவும் கூறி, தற்போது கல்லூரியில் படித்து வரும் 21 வயது அந்த மாணவி போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மாணவிகளிடம் பாலியல் தொல்லை செய்யும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை அறிந்து தற்போது தைரியத்தை ஏற்படுத்திகொண்டு போலீசில் புகார் அளித்ததாக அந்த மாணவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரையை கைது செய்து, 5-ந் தேதி போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக உடற்கல்வி ஆசிரியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் 2008, 2016-ம் ஆண்டுக்கு முன்பு படித்த 2 மாணவிகள் தங்களுக்கும் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை பாலியல் தொல்லை கொடுத்ததாக மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதனால் நேற்று முன்தினம் போலீஸ் நிலையம் பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. இந்த புகார்களை பதிவு செய்த மகளிர் போலீசார், 3 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு ஆசிரியர் அண்ணாதுரையை நீதிபதி ரிசானாபர்வீன் வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.