செய்திகள்
ஊட்டி ஆரணி ஹவுஸ் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளை காணலாம்

காலியாக கிடக்கும் தங்கும் விடுதிகள்- 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு

Published On 2021-06-04 15:12 IST   |   Update On 2021-06-04 15:12:00 IST
முழு ஊரடங்கு உத்தரவால் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு ரூ.6 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
ஊட்டி:

கோடை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ் பெற்றது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் களை கட்டி காணப்படும். இதற்கு காரணம் வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிவதே ஆகும். இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள், நட்சத்திர விடுதிகள், ஓட்டல்களில் ஓரிரு நாட்கள் தங்கி அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்து விட்டு செல்கின்றனர்.

இதற்கிடையில் கொரோனா பாதிப்பால் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்கவில்லை. வணிகரீதியாக வருகிறவர்கள் தங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டாலும், தங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. இதனால் ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகள் காலியாக கிடக்கிறது.

ஊட்டி நகரில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக 1,500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், நட்சத்திர விடுதிகள் உள்ளது. வழக்கமாக கோடை சீசனில் தங்கும் விடுதிகளில் உள்ள அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டு விடும். ஒரு நாள் வாடகை ரூ.2,000 முதல் ரூ.6,000 வரை வசூலிக்கப்படுகிறது. நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஓட்டல்களுக்கு தனி வாடகை உள்ளது.

முழு ஊரடங்கால் அனைத்து தங்கும் விடுதிகளும் சுற்றுலா பயணிகள் இன்றி முடங்கி கிடக்கிறது. இதனால் விடுதி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு பணிபுரிந்து வந்த வரவேற்பாளர்கள், பராமரிப்பாளர்கள், தொழிலாளர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்து வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். இதுகுறித்து விடுதி உரிமையாளர்கள் கூறியதாவது:-

முழு ஊரடங்கு உத்தரவால் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு ரூ.6 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. வருமானம் இல்லாததால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காத கொடுக்க முடியாத நிலை இருக்கிறது. இதனால் பணிபுரிந்தவர்கள் பணிக்கு வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு சிலர் மட்டும் தங்கும் விடுதிகளை பராமரித்து வருகின்றனர். கடந்து ஆண்டில் இருந்து நடப்பாண்டில் பழைய நிலைமைக்கு திரும்பி விடுவோம் என்று எதிர்பார்த்தோம். மீண்டும் கொரோனா பாதிப்பால் வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதித்து உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Similar News