செய்திகள்
போராட்டம்

ஆரணி அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை போராட்டம்

Published On 2021-06-03 13:32 GMT   |   Update On 2021-06-03 13:32 GMT
ஆரணி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு தங்கள் பகுதிக்கு குடிநீர் வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி:

ஆரணி அருகே உள்ள சேவூர் கிராமத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும்  சேவூர் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரிவர வழங்படவில்லை.

இது குறித்து அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளாவிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் சேவூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் பகுதிக்கு குடிநீர் வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தரணி போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த கொரோனா காலத்தில் நாங்கள் வெளியிலும் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றோம். கடந்த 20 நாட்களாக எங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கவில்லை. உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.வி. மூர்த்தி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர் ஒன்றிய பொது நிதி மூலம் பழுதான குடிநீர் மோட்டாரை சீர்செய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை அடுத்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News