செய்திகள்
சசிகலா

ஆதரவாளர்களிடம் தொடர்ந்து போனில் பேசும் சசிகலா

Published On 2021-06-01 06:37 GMT   |   Update On 2021-06-01 06:37 GMT
தன்னிடம் பேசும் ஆதரவாளர்களிடம் கட்சியை சரிசெய்துவிடலாம், கவலைப்பட வேண்டாம் என்று சசிகலா கூறி வருகிறார்.
சென்னை:

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கடந்த சட்டசபை தேர்தலில் அரசியலை விட்டு விலகி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. இதற்கிடையே சசிகலா அவரது ஆதரவாளரிடம் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த ஆடியோவில், ‘ஆதரவாளரிடம் பேசிய சசிகலா விரைவில் அரசியலுக்கு வருவேன். கட்சியை சரி செய்துவிடலாம்’ என்று கூறி இருந்தார். இதே போல் அடுத்தடுத்து அவர் தொண்டர்களிடம் பேசிய ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.



இந்தநிலையில் சசிகலா ஆடியோ குறித்து கருத்து தெரிவித்த அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி எம்.எல்.ஏ. சசிகலா எந்த சூழ்நிலையிலும் அ.தி.மு.க.வில் நுழைய முடியாது. அவர் அ.தி.மு.க.வில் நுழைவதை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினார்.

இந்தநிலையில் சசிகலா அரசியலுக்கு வர வேண்டும் என்று அவருக்கு ஆதரவாளர்கள் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்கள். அந்த கடிதத்தின் அடிப்படையில் சசிகலா தொடர்ந்து அவரது ஆதரவாளர்களுடன் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆதரவாளர்கள் நிறைய பேரிடம் அவர் பேசி உள்ளார். தினமும் 25 பேர் முதல் 50 பேரிடம் சசிகலா பேசுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தன்னிடம் பேசும் ஆதரவாளர்களிடம் கட்சியை சரிசெய்துவிடலாம். கவலைப்பட வேண்டாம் என்று சசிகலா கூறி வருகிறார்.

சசிகலா தொடர்ந்து ஆதரவாளர்களிடம் பேசி வருவது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News