செய்திகள்
50-வது பிறந்தநாளை கொண்டாடிய விஜய் , சுஜய் யானை.

முதுமலையில் 50வது பிறந்தநாளை கொண்டாடிய கும்கி யானைகள்

Published On 2021-05-21 18:12 IST   |   Update On 2021-05-21 18:12:00 IST
1971-ம் ஆண்டு முகாமில் இருந்த தேவகி என்ற யானை இரட்டை ஆண் குட்டிகள் ஈன்றது. அந்த குட்டிகளுக்கு விஜய், சுஜய் எனப் பெயரிட்டு கும்கிகளாக மாற்றப்பட்டது.
கூடலூர்:

கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு, அபயரண்யம் முகாம்களில் 29 வளர்ப்பு யானைகள் உள்ளது. வனப்பகுதியில் தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகள் மீட்டு முகாம்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடித்து முகாம்களில் அடைத்து கும்கியாக வனத்துறையினர் மாற்றி வருகின்றனர். மேலும் பல்வேறு பயிற்சிகள் அளித்து வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

வளர்ப்பு யானைகளுக்கு வில்சன், சங்கர், இந்திரா, முதுமலை, உதயன், மசினி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தெப்பக்காடு முகாமில் விஜய், சுஜய் என்ற வளர்ப்பு யானைகள் உள்ளன. 1971-ம் ஆண்டு முதுமலையில் பிறந்த இந்த இரட்டை சகோதரர்களுக்கு நேற்று 50-வது வயதானது.

இதைத்தொடர்ந்து விஜய், சுஜய்யின் பிறந்த நாள் முதுமலை முகாமில் கொண்டாடப்பட்டது. யானைகளுக்கு கரும்பு மற்றும் பழங்களை வனத்துறையினர் வழங்கினர். இதுகுறித்து தெப்பக்காடு வனச்சரகர் தயானந்தன் கூறியதாவது:-

1971-ம் ஆண்டு முகாமில் இருந்த தேவகி என்ற யானை இரட்டை ஆண் குட்டிகள் ஈன்றது. அந்த குட்டிகளுக்கு விஜய், சுஜய் எனப் பெயரிட்டு கும்கிகளாக மாற்றப்பட்டது. இரண்டு யானைகளும் காட்டு யானைகளை விரட்டுவதில் சிறப்பு வாய்ந்தவை.

2017-ம் ஆண்டுசுஜய் சாடிவயல் முகாமில் பிற யானைகளிடம் சண்டை போட்டபோது ஒரு தந்தம் உடைந்துவிட்டது. தற்போது 2 யானைகளும் பிறந்து 50-வது வயது பூர்த்தி அடைந்துள்ளது. பிறந்தநாளையொட்டி கரும்பு, பழங்கள் வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News