செய்திகள்
ஆரணியில் மரத்தடியில் சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனை - அதிகாரிகள் ஆய்வு
ஆரணியில் தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மரத்தடியில் சிகிச்சையளிப்பதாக புகார் வந்தது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் டாக்டர் ஒருவர் ஆரணி பஸ் நிலையம் அருகே மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் பொதுமக்களுக்கு மருத்துவமனையில் தனியாக திறந்த வெளியில் தகரத்தால் கொட்டகை அமைத்து, அதில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தி உள்ளார்.
மேலும் மரத்தடியில் வைத்தும் சிகிச்சை அளிக்கப்படுவதாக புகார்கள் வந்தது. கொட்டகை அமைத்து சிகிச்சை அளிப்பதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் பல முறை எதிர்ப்பு தெரிவித்து, அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை சுகாதாரத்துறை இணை இயக்குனர் கண்ணகி உத்தரவின் பேரில், ஆரணி அரசு மருத்துவமனை டாக்டர் கவிமணி, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், ஆரணி தாசில்தார் செந்தில்குமார், நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமரவேல் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மரத்தடியில் சிகிச்சை அளிக்கக்கூடாது, மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.