செய்திகள்
மூத்த மகள் அபிராமி, இளைய மகள் ஷிவானியுடன் தாய் செல்வி ஷோபனா.

வீட்டுக்குள் தாய்-2 மகள்கள் மர்ம மரணம்- போலீசார் விசாரணை

Published On 2021-05-19 08:05 IST   |   Update On 2021-05-19 08:05:00 IST
வீட்டுக்குள் தாய், 2 மகள்கள் மர்மமான முறையில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அழகாபுரி நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம். முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி செல்வி ஷோபனா (வயது 50). இவர்களுக்கு அபிராமி(24), ஷிவானி(20) ஆகிய 2 மகள்கள்.

இதில் அபிராமி பி.எஸ்சி. பட்டம் பெற்றவர். ஷிவானி மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் தர்மலிங்கம் இறந்துவிட்டார்.

இதற்கிடையே மூத்த மகள் அபிராமி கீழே விழுந்து தலையில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பின்னர் அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக தெரியவருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்துவீட்டினர், சென்று பார்த்தனர். வீட்டு முன்புள்ள இரும்பு கேட் கதவு சாத்தப்பட்டு, மற்ற கதவுகள் திறந்து கிடந்தன.

பின்னர் இதுகுறித்து அதே தெருவில் வசிக்கும் செல்வி ஷோபனாவின் தங்கை ஷாலினியிடம் தகவல் தெரிவித்தனர். உடனே அவர் விரைந்து வந்து உள்ளே சென்று பார்த்தார்.

அங்கு ஹாலில் ஷிவானி தூக்கில் பிணமாக தொங்கினார். வீட்டின் பின்புறத்தில் செல்வி ஷோபனாவின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது. படுக்கை அறையில் அபிராமி பிணமாக கிடந்தார். அங்கு ரத்தம் சிதறி உறைந்து போய் இருந்தது. இந்த காட்சிகளை கண்ட ஷாலினி அதிர்ச்சி அடைந்து அலறினார்.

உடனே இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அபிராமி தனக்கு திருமணம் நடக்கவில்லை என்று தனது தாய், தங்கையுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த தகராறில் கீழே விழுந்து அபிராமிக்கு மீண்டும் தலையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வெளியேறி அவர் இறந்து இருக்கலாம் எனவும், போலீசாரின் விசாரணைக்கு பயந்து செல்வி ஷோபனாவும், அவருடைய இளைய மகளும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இருப்பினும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் 3 பேரின் சாவுக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். அதே நேரத்தில் அவர்களது சாவுக்கு வேறு பின்னணி எதுவும் உள்ளதா, கொலை செய்யப்பட்டார்களா? என்ற கண்ணோட்டத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News