செய்திகள்
வீட்டிற்குள் புகுந்த கரடியை காணலாம்

கோத்தகிரி அருகே பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த கரடி

Published On 2021-05-18 09:58 GMT   |   Update On 2021-05-18 09:58 GMT
கோத்தகிரி அருகே பட்டப்பகலில் வீட்டிற்குள் கரடி புகுந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி:

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாலும், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர அனுமதி இல்லாததாலும் சாலைகள் மற்றும் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் வனப்பகுதியைவிட்டு வெளியே வந்து குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் உலா வந்த வண்ணம் உள்ளன.

கோத்தகிரி அரவேனு பகுதியில் இருந்து மூணுரோடு செல்லும் சாலையில், பனகுடி கிராமத்தில் ராமன் என்பவர் வீடு உள்ளது. இந்த நிலையில் ராமன் வீட்டிற்குள் நேற்று முன்தினம் பட்டப்பகலில் கரடி ஒன்று புகுந்தது. தொடர்ந்து அந்த கரடி வீட்டில் உணவு எதேனும் உள்ளதா என்று சுற்றி சுற்றி பார்த்தது. பின்னர் அந்த கரடி அங்கிருந்து சென்றனது. கரடி வீட்டிற்குள் புகுந்த நேரத்தில் வீட்டில் உள்ளவர்கள் மற்றொரு அறையில் அமர்ந்து இருந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த காட்சி ராமன் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் கோத்தகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், கோத்தகிரி பகுதியில் பகல் நேரங்களில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடி வருகின்றன. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே குடியிருப்பு பகுதிகளில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News