செய்திகள்
கோப்பு படம்,

வேட்டவலம் அருகே நாதஸ்வர கலைஞர் மர்ம மரணம்- போலீசில் மனைவி புகார்

Published On 2021-05-14 17:51 GMT   |   Update On 2021-05-14 17:51 GMT
வேட்டவலம் அருகே நாதஸ்வர கலைஞர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் மனைவி புகார் செய்துள்ளார்.
வேட்டவலம்:

வேட்டவலத்தை அடுத்த ஆவூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 44). நாதஸ்வர கலைஞர். இவர் கடந்த 11-ந் தேதி நாதஸ்வர நிகழ்ச்சிக்கு அட்வான்ஸ் வாங்கி வருவதாக கூறிச்சென்றார். பின்னர் முருகன் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று காலை வெண்ணியந்தல் செல்லும் சாலையில் உள்ள சம்பத் என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள ஒரு இடத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.

அப்பகுதியை சேர்ந்தவர்கள் சென்று பார்த்தபோது இறந்து கிடந்தவர் காணாமல்போன நாதஸ்வர கலைஞர் முருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் சென்று முருகனின் உடலை வீட்டுக்கு கொண்டு சென்றனர்.

அவரது உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், அவருடைய மனைவி காஞ்சனா வேட்டவலம் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் வேட்டவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிலவழகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News