செய்திகள்
ஆரணியில் கொரோனா தொற்றில் மீண்ட தாய்-மகன் திடீர் மரணம்
ஆரணியில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட தாய்-மகன் இருவரும் திடீரென அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை நகராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் வசித்து வந்தவர் கணேசன் (வயது 61), கூலித்தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசனும், அவரின் தாய் வள்ளியம்மாளும் (81) உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர்.
அங்கு, இருவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு, தீவிர சிகிச்சைக்கு பின் தொற்றில் இருந்து குணமாகி 10 நாட்களுக்கு முன்பு தாயும், மகனும் வீடு திரும்பினர்.
நேற்று முன்தினம் இரவு திடீரென கணேசன் உயிரிழந்தார். மகன் உயிரிழந்ததைப் பார்த்த வள்ளியம்மாளும் அதிர்ச்சியடைந்து சிறிது நேரத்தில் உயிரிழந்தார். தாயும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்த தகவலை கேட்டு அவரின் வீட்டில் அப்பகுதி மக்கள் திரண்டனர். அந்தப் பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. தாய், மகன் கொரோனா பாதித்தவர்கள் என்பதால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அவர்களின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.