செய்திகள்
திருநாவுக்கரசு

திருப்பூர் மாநகராட்சி அதிகாரி கொரோனாவுக்கு பலி

Published On 2021-05-13 01:34 GMT   |   Update On 2021-05-13 16:32 GMT
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோல் பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோல் பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. ஆனாலும் அரசு அதிகாரிகள், போலீசார், டாக்டர்கள், செவிலியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு பின்னர் விரைவில் குணமடைந்து வருவதால் சற்று ஆறுதலாக உள்ளது.

இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி ஆண்டிபாளையத்தில் உள்ள 4-வது மண்டல உதவி பொறியாளராக பணியாற்றி வந்தவர் திருப்பூர் திருநீலகண்டபுரத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 56). இவருக்கு கடந்த வாரம் சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பு இருக்குமோ? என சந்தேகமடைந்த அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து திருப்பூர் வீரபாண்டிபிரிவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். மண்டல அதிகாரி கொரோனாவுக்கு பலியானது பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே கொரோனாவுக்கு மாவட்டத்தில் உள்ள முக்கியமான அரசு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பலியாகி வருகிறார்கள். இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News