செய்திகள்
கைது

கிருஷ்ணகிரியில் இரட்டை கொலையில் மேலும் ஒரு வாலிபர் கைது

Published On 2021-05-08 16:38 GMT   |   Update On 2021-05-08 16:38 GMT
கிருஷ்ணகிரியில் நடந்த இரட்டை கொலையில் மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி வீரப்பன் நகர் 4-வது கிராசை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 50). மரவேலை செய்து வந்தார். இவரது மனைவி பப்பிராணி (45). புகழேந்தியின் அண்ணன் மகன் லோகேஷ் என்கிற லல்லு (19). இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். புகழேந்தி குடும்பத்திற்கும், லோகேஷ் குடும்பத்திற்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை புகழேந்தி மனைவியுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது லோகேஷ், அவரது நண்பர்கள் காவேரிப்பட்டணம் அம்பேத்கர் தெரு சதீஷ் (19), முகேஷ் (23) ஆகிய 3 பேரும் புகழேந்தியை சரமாரியாக கத்தியால் குத்தினார்கள்.

அதை தடுக்க வந்த அவரது மனைவி பப்பிராணியையும் அவர்கள் குத்தினார்கள். இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். சத்தம் கேட்டு அங்கு வந்த புகழேந்தியின் தம்பி கரிகாலன், அவரது மனைவி சரசு ஆகிய 2 பேரும் அங்கு வந்தனர். அவர்களையும் லோகேஷ் உள்ளிட்ட 3 பேரும் கத்தியால் குத்தினார்கள். இதில் அவர்களும் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த இரட்டை கொலை குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த கரிகாலன், அவரது மனைவி சரசு ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேஷ், சதீஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த முகேசை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் சொத்து தகராறில், லோகேஷ், தனது சித்தப்பா, சித்தி ஆகியோரை நண்பர்கள் உதவியுடன் கொலை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News