செய்திகள்
அரசு புறம்போக்கு இடத்தை மீட்டுத்தரக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தபோது எடுத்த படம்.

அரசு புறம்போக்கு இடத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்

Published On 2021-05-06 15:56 GMT   |   Update On 2021-05-06 15:56 GMT
தண்டராம்பட்டு அருகே தனி நபர் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்டராம்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள வீராணம் ஊராட்சிக்குட்பட்ட கொரட்டாம்பாளையம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கடந்த 1977- ஆம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் வேறு இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அங்கு இயங்கி வருகிறது. ஏற்கனவே பள்ளி இருந்த இடத்தில் உள்ள 10 சென்ட் அரசு புறம்போக்கு இடத்தில் குடிநீர் தேக்க தொட்டி மற்றும் பால் சொசைட்டி ஆகியவை இயங்கி வருகிறது.

இந்த நிலையில் அந்த இடத்திற்கு அருகில் உள்ள தனி நபர் ஒருவர் அரசு இடத்தை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைத்துள்ளார். இதனை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் சார்பில் பலமுறை கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் நேற்று காலை அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகில் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராயர், வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார், கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ், ஊராட்சி செயலாளர் மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது 10 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து பொது மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.
Tags:    

Similar News